உள்ளூர் செய்திகள்
கொலை

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதால் விபரீதம்- பெண்ணை குத்தி கொலை செய்த வாலிபர்

Published On 2022-05-04 06:52 GMT   |   Update On 2022-05-04 06:52 GMT
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனியை சேர்ந்த ராமராஜ் மனைவி பவுனுத்தாய்(50). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

கணவரை இழந்து வசித்து வந்த பவுனுத்தாய் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்து வந்தார். மேலும் சீட்டு பிடித்து பணம் வசூல் செய்தார். இவரிடம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பிரபு(30) என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சம் கடனாக வாங்கினார்.

கட்டிட தொழிலாளியான பிரபு திருமணம் ஆகவில்லை . தான் வாங்கிய கடனுக்காக கடந்த 5 மாதமாக அவர் வட்டிபணம் செலுத்த வில்லை. இதனால் பவுனுத்தாய்க்கும், பிரபுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வட்டி பணம் தராததால் அவரது வீட்டிற்கே சென்று பவுனுத்தாய் சத்தம் போட்டுள்ளார். வீட்டில் பிரபு இல்லாததால் அவரது பெற்றோரிடம் பணத்தை கொண்டுவந்து தருமாறு மிரட்டிச்சென்றுள்ளார்.

வேலைக்கு சென்று திரும்பிய பிரபுவிடம் அவரது பெற்றோர் நடந்த விபரங்களை கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபு கத்தியுடன் பவுனுத்தாய் வீட்டிற்கு சென்றார். நான் பணம் வாங்கிய விபரத்தை எப்படி என் வீட்டில் தெரிவிக்கலாம் எனக்கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்த முயன்றார். இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் மேலும் ஆத்திரமடைந்த பிரபு அவரை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதனையடுத்து தனது கையையும் கத்தியால் கீறிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையையும் அபகரித்து கொண்டு வெளியேறினார்.

பவுனுத்தாய் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களிடம் அவருக்கு செலுத்த வேண்டிய வட்டியும் முதலும் நான் கொடுத்துவிட்டேன் என பிரபு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் தான் குத்திய கத்தியுடன் சரணடைந்தார்.

மேலும் தான் கட்ட வேண்டிய பணத்திற்காக தொடர்ந்து தரக்குறைவாக பேசியதால் அவரை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகையையும் திருடியதாக போலீசில் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதால் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News