உள்ளூர் செய்திகள்
தேவூர்அருகே மர்ம நோயால் கால்நடைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம், தேவூர் அருகே பெரமாச்சி பாளையம், சென்றாயனூர், வட்ராம்பாளையம், செட்டிபட்டி, பாலிருச்சம் பாளையம், புதுபாளையம், நல்லங்கியூர், குள்ளம்பட்டி, தண்ணிதாசனூர், மூலப்பாதை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் சிந்து மாடு, பசு மாடு, எருமை, ஆடு, உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளில் திடீரென மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு மாடுகள் திடீரென கீழே விழுந்து எழுந்து நடக்க முடியாமல் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக படுத்த படுக்கையாக உள்ளது. இதனால் விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேவூர் பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது; கடந்த ஒரு மாத காலமாக கால்நடைகளில் திடீர் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால் மாடுகள் திடீரென கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாக சிரமப் பட்டு வருகிறது.
அவ்வாறு படுத்த படுக்கையாக இருக்கும் கால்நடைகளுக்கு தீவனங்கள் மற்றும் பருத்தி புண்ணாக்கு ராகி கூழ் உள்ளிட்டவைகளை வைத்து வருகிறோம் மேலும் கால்நடை மருத்துவரைக் கொண்டு சிகிச்சையளித்து 15 நாட்களுக்கு மேலாக பாதுகாத்து வருகிறோம் என்றனர்.
மேலும் கால்நடை மருத்துவர்கள் தேவூர் பகுதியில் முகாமிட்டு மர்ம நோய் தாக்குதலால் படுத்த படுக்கையாக இருக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.