உள்ளூர் செய்திகள்
உடுமலையில் நடைபாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி
பெரும்பாலான பகுதிகளில் நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழையின் போது, அத்தியாவசிய தேவைக்காக நகருக்கு வந்து செல்லும் மக்கள், மாணவ, மாணவிகள் என பலரும் பாதிப்பு அடைகின்றனர்.
உடுமலை:
உடுமலையில் நாளுக்கு நாள், வாகன போக்குவரத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. காலை, மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் அதிகப்படியான வாகனங்களின் இயக்கத்தால் நெரிசல் ஏற்படுகிறது. நகரில் ரோடு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும், அதற்கான பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது.
முக்கிய பகுதிகளான நேருவீதி, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டுமே, பொதுமக்கள் எளிதில் நடந்து செல்ல ஏதுவாக நடைபாதை உள்ளது. அவற்றிலும், கடைக்காரர்கள், விற்பனைப் பொருட்கள் வைத்து ஆக்கிரமித்துள்ளதால் மக்கள் அவதிக் குள்ளாகின்றனர்.
குறிப்பாக, பெரும்பாலான பகுதிகளில் நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழையின் போது, அத்தியாவசிய தேவைக்காக நகருக்கு வந்து செல்லும் மக்கள், மாணவ, மாணவிகள் என பலரும் பாதிப்பு அடைகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி ரோட்டில் நடைபாதை அமைத்தும், பலர் தங்களது மோட்டார் சைக்கிள், கார், போன்ற வாகனங்களை நடைபாதையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் மக்கள் நடைபாதைகளில் செல்ல முடியாமல் வாகனங்கள் வேகமாகச்செல்லும் ரோட்டில் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.
இது வாகன ஓட்டுனர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதே போல் இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. ரோட்டில் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும், கழிவுகள் நிறைந்தும் காணப்படுகிறது. அந்த இடத்தை கடந்து செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நடைபாதை திட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.