உள்ளூர் செய்திகள்
கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா
கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓதினார்கள்.
அதனைத்தொடர்ந்து மாலை 2 மணிக்கு மேல் ராகு பகவான், கேது பகவான், நாகப்பசாமி மற்றும் நவக்கிரங்களுக்கும், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், பரமேஸ்வரர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு பகவான், கேது பகவான், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
மாலை 3.13 மணிக்கு ராகு, கேது ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தனர். கோவிலில் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசி காரர்களுக்கு பரிகாரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.