உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாட்டு படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் எந்திரம் வழங்கிய காட்சி.

திருச்செந்தூர் அருகே 68 நாட்டு படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் எந்திரம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-03-21 10:15 GMT   |   Update On 2022-03-21 10:15 GMT
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டினத்தில் பாரம்பரிய நாட்டு படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்செந்தூர்:

தமிழக மீன்வளத்துறை சார்பில் நாட்டு படகு மீனவர்களுக்கு அரசின் மானியத்துடன் வெளிப் பொருத்தும் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டினத்தில் பாரம்பரிய நாட்டு படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வரவேற்று பேசினார். 

விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தூத்துக்குடி இனிகோ நகர், வீரபாண்டியன்பட்டினம், கொம்புத்துறை போன்ற பகுதிகளை சேர்ந்த 68 பாரம்பரிய நாட்டு படகு மீனவர்களுக்கு ரூ.27 லட்சத்து 77 ஆயிரத்து 261 அரசின் மானியத்துடன்  வெளிப் பொருத்தும் எந்திரம் வழங்கினார். பின்னர் கடலில் மாயமான 2 மீனவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.37 ஆயிரத்து 500-க்கான காசோலையும் வழங்கினார். 

மேலும், அந்த குடும்பங்களுக்கு மாத உதவி தொகை வழங்கும் ஆணையையும் வழங்கினார். அதேபோல், மீனவர் விபத்து குழு காப்பீடு திட்டத்தில்  இடி- மின்னல் தாக்கி பலியான சிலுவைபட்டியை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு தொகை வழங்கினார். 

விழாவில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்ராஜ் சேவியர், தாசில்தார் சுவாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News