உள்ளூர் செய்திகள்
கல்வி உதவித்தொகை திட்டத்தேர்வு - வருகிற 5ந்தேதி நடக்கிறது
மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது.
உடுமலை:
தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) வருகிற 5-ந்தேதி நடக்கிறது. 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் தகுதி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம், பிளஸ்-2 வரை வழங்கப்படுகிறது.
இத்தொகை மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்கள் பயிற்சி பெறுவதில் சிக்கல் இருந்தது. தற்போது வழக்கம்போல் பள்ளிகள் செயல்படுவதால் சில அரசுப் பள்ளிகளில் நேரடியாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டது. ஆசிரியர்கள் ஜவகர், பெருமாள், சிவக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு தேர்வுக்குரிய வழிகாட்டுதல்களை எடுத்துரைக்கின்றனர்.
அதன்படி காலை 8:30 மணி முதல்9 மணி வரையும், மாலை, 3:30 மணி முதல் 4:30 மணி வரையும் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 9080216985 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.