உள்ளூர் செய்திகள்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.3½ கோடிக்கு வர்த்தகம்
கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.3½ கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதில் ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த சந்தைக்கு மொத்தம் 4 ஆயிரம் ஆடுகள், 2 ஆயிரத்து 500 கோழி மற்றும் சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ.5 ஆயிரத்து 800 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரத்து 600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடுகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது.
சேவல்கள் தரத்திற்கு ஏற்ப ரூ.1,500 முதல் ரூ.4 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகள் 110 டன் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தது. நேற்று மட்டும் சந்தையில் ரூ.3 கோடியே 50 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.