உள்ளூர் செய்திகள்
வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் மனு.

சரியான எடையில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Published On 2022-01-23 06:43 GMT   |   Update On 2022-01-23 06:43 GMT
சரியான எடையில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்:

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைகளாக நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இதில் 40 கிலோ எடை நெல், சாக்கு 750 கிராம் என சேர்த்து 40.750 கிலோ எடையில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். 

இதை விட கூடுதல் அளவீட்டில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக்கூடாது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு மூட்டைக்கு தனியே கையூட்டாக நிதி வசூல் செய்யப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிவதற்கான பணியாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் சமூக ரீதியான இட ஒதுக்கீட்டின் படி தேர்வு செய்யப்படும் போது அவர்களது ஏழ்மையை கணக்கில்கொண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சங்க மாநில தலைவர் வாசன், துணை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News