உள்ளூர் செய்திகள்
அலங்கார ஊர்தி ஊர்வலம் - தமிழக அரசுக்கு இந்து முன்னணி பாராட்டு
மாவீரர் புலித்தேவன் புகழைப் போற்றும் வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை நிறுவி அவரது வரலாற்று சம்பவங்களை கல்வெட்டுகளில் பதிப்பித்தால் சிறப்பாக இருக்கும்.
திருப்பூர்:
தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுவதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய குடியரசு தினத்தில் தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றும் வகையில் அலங்கார ஊர்தி ஊர்வலம் நடத்திடும் தமிழக அரசின் நடவடிக்கையைப் பாராட்டுகிறோம்.
இந்திய குடியரசு அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் விதமாக அலங்கார ஊர்தி அணி வகுப்பு ஊர்வலம் நடத்திட அறிவிப்பு செய்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்து முன்னணி பாராட்டுகிறது.
மேலும், இந்திய சுதந்திரப்போரின் முன்னோடியாக விளங்கிய மாவீரர்கள் புலித்தேவன், வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள், அழகு முத்துக்கோன் உள்ளிட்டவர்களையும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு., முத்துராமலிங்கத் தேவர்என அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களை அனைத்து மாவட்ட தலைநகர்களில் சிறப்பிக்கும் விதமாக காட்சிப்படுத்த வேண்டும்.
மாவீரர் புலித்தேவன் புகழைப் போற்றும் வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சிலை நிறுவி அவரது வரலாற்று சம்பவங்களை கல்வெட்டுகளில் பதிப்பித்தால் சிறப்பாக இருக்கும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் 4 முதல் 10ம் வகுப்பு வரை வரலாற்று நூலில் இடம்பெற பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.