உள்ளூர் செய்திகள்
காயல்பட்டினத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த தொழிலாளியின் பைக் திருட்டு போனது. அதனை ஓட்டி சென்ற வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் வடக்கு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (வயது 31), தச்சு தொழிலாளி. இவர் தினமும் பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம்.
கடந்த 17-ந்தேதி இரவு அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை பல இடங்களிலும் தேடினார்.
அப்போது இவரது மோட்டார் சைக்கிளை காட்டு தைக்கா தெருவை சேர்ந்த சதாம் உசேன் (19) என்பவர் ஓட்டி செல்வதை பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு காயல்பட்டினம் யூ.எஸ்.சி. மைதானம் அருகே நின்றிருந்த சதாம் உசேனை செந்தில் ஆறுமுகம் தனது நண்பர் குமரேசன் உடன் சேர்ந்து பிடித்து ஆறுமுகநேரி போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் செந்தில் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிளை சதாம் உசேன் திருடியது தெரியவந்தது. போலீசார்அவரை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.