உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் மேல்மலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கூடாரங்கள்

கொடைக்கானலை ஆக்கிரமித்த டெண்ட் சுற்றுலா பயணிகள்

Published On 2022-01-17 08:55 GMT   |   Update On 2022-01-17 08:55 GMT
கொடைக்கானல் மலைகிராமங்களில் மீண்டும் டெண்ட் அமைத்து சுற்றுலா பயணிகள் தங்கி உள்ளனர்
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகர் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் தனிமையை நாடும் சுற்றுலா பயணிகள் மலை கிராமங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

மேல்மலை கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் அனுமதியின்றி டெண்ட் கூடாரங்கள் அமைக்கப் பட்டது. வன விலங்குகள் அச்சுறுத்தல் மற்றும் டெண்ட் கும்பல் பயன்படுத்தும் தீ வனப்பகுதிக்கு பரவும் அபாயம் இருப்பதால் இதனை அகற்ற உத்தரவிடப்பட்டது.

அதன்படி 300க்கும் மேற்பட்ட டெண்ட் கூடாரங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சில காலம் அமைதியாக இருந்த கும்பல் தற்போது மீண்டும் உலாவரத் தொடங்கி உள்ளது. பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித பாதுகாப்பும் இன்றி நள்ளிரவு நேரங்களில் டெண்ட் அமைத்து பயணிகள் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வரும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளால் அவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.

மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் போதை வஸ்துகள், போதை காளான்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை காளான் மற்றும் கஞ்சா விற்பவர்களை கண்டறிந்து போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்ததால் அதன்பயன்பாடு குறைந்துள்ளது.

எனவே போலீசார் டெண்ட் அமைக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News