உள்ளூர் செய்திகள்
போராட்டம்

சேலத்தில் கைதி திடீர் உயிரிழப்பு- உடலை வாங்க 3-வது நாளாக உறவினர்கள் மறுப்பு

Published On 2022-01-15 10:13 GMT   |   Update On 2022-01-15 10:13 GMT
சேலத்தில் உயிரிழந்த கைதியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). இவரை நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 12-ந் தேதி இறந்தார். இதற்கு போலீசார் தொந்தரவே காரணம் என கூறியும், காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் இமயவரம்பன் தலைமையில் உறவினர்கள் 13-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து டவுன் வி.ஏ.ஓ. கோபிநாத் போலீசில் புகார் கொடுத்தார். அதில் அனுமதியின்றி கூடி சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி இருந்தார். இதையடுத்து இமயவரம்பன் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் இறந்து போன கைதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் உறவினர்கள், உடலை வாங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News