உள்ளூர் செய்திகள்
தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது
மெகா தடுப்பூசி முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாம்கள், முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று