உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

Published On 2022-01-06 08:41 GMT   |   Update On 2022-01-06 08:41 GMT
தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம், ‘தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வி‌ஷயங்களை சுட்டிக்காட்டி அதனை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் எங்களது ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினோம். தற்போது தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகிறார்கள்.

வங்கி அதிகாரி ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளார். அதனை தடுப்பதற்கும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரையில், சென்ற ஆட்சியிலே தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 38,2001 அன்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலே, 2021 -ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறிவிட்டது.

ஆனாலும், அந்தத் தீர்ப்பின்மீது சட்ட ஆலோசனை கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினைத் தடை செய்யக்கோரி, இந்த அரசு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்திருக்கிறது.

வழக்கைப் பொறுத்தவரைக்கும், விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழகத்திலே நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News