உள்ளூர் செய்திகள்
குழப்பத்தை தவிர்க்க பருத்தி ஏலத்திற்கு வங்கி கணக்கு கட்டாயம்
வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் காசோலை வழங்கினால் தான் அது வங்கியினரால் ஏற்றுக்கொள்ளப்படும்.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதி புதன்தோறும் பருத்தி ஏலம் நடக்கிறது. தற்போது பருத்தி அறுவடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் வாரந்தோறும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் விற்பனை செய்யும் பருத்திக்குரிய தொகை, நேரடி வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் காசோலை மூலமே தொகையை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் காசோலை வழங்கினால் தான் அது வங்கியினரால் ஏற்றுக்கொள்ளப்படும். இதுகுறித்து திருப்பூர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பெரும்பாலான விவசாயிகளின் ஆதார் அட்டையில் அவர்களது பெயரில் உள்ள எழுத்துகளும், வங்கிக்கணக்கு புத்தகத்தில் உள்ள எழுத்துக்களும் வித்தியாசமாக உள்ளன.சில விவசாயிகள் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள தங்களின் முழு பெயரை சொல்லாமல் சுருக்கமாக அழைக்கப்படும் பெயரை சொல்லி காசோலையை வாங்கி சென்று விடுகின்றனர்.
அத்தகைய காசோலை வங்கியினரால் நிராகரிக்கப்படுகிறது. இக்குழப்பத்தை தவிர்க்கவே வங்கி புத்தகத்தை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயருக்கு காசோலை வழங்கும் பட்சத்தில் இக்குழப்பத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.