உள்ளூர் செய்திகள்
கைது

மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணம் திருட்டு- வாலிபர் கைது

Published On 2021-12-18 10:03 GMT   |   Update On 2021-12-18 10:03 GMT
நெல்லை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் நம்பி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70).

இவர் நேற்று மாலை திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பில் உள்ள கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றார். பின்னர் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டாம், எனது மோட்டார் சைக்கிளில் ஏறி கொள்ளுங்கள் என கூறி அவரை அழைத்து சென்றார்.

காட்டுப்பகுதி வந்ததும் மூதாட்டியை இறக்கி விட்ட வாலிபர் அவரிடம் இருந்த மணிபர்சை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் செயின் மற்றும் ரொக்கப் பணம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொன்னம்மாள் வடக்கு விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கொள்ளையில் ஈடுபட்டது வடக்கு விஜய நாராயணம் அருகே உள்ள திரிவிதநேரியை சேர்ந்த லாரி டிரைவரான சங்கர் ராஜ் (30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News