உள்ளூர் செய்திகள்
நெல்லை விபத்து- மாணவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டம்
ஆவேசம் அடைந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர்.
நெல்லை:
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 4 மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியின் சுவர் அடித்தளம் இல்லாமல் அமைப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சுவர் இடிந்து சக நண்பர்கள் பலியானதால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்த பொருட்கள், வளாகத்தில் இருந்த பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடித்து, உடைத்து சூறையாடினர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விடப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது, பிணவறையின் வெளியே அவர்களின் உறவினர்கள் திரண்டிருந்தனர். உடல்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.