உள்ளூர் செய்திகள்
கொள்ளை

காந்திபுரத்தில் 2 செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2021-12-14 11:20 GMT   |   Update On 2021-12-14 11:20 GMT
கோவை காந்திபுரத்தில் நள்ளிரவில் 2 செல்போன் கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை காந்திபுரம் பகுதியில் செல்போன் மற்றும் உதிரிப்பாக விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதாப், ராஜூ ஆகியோர் காந்திபுரம் கிராஸ்கட் 8-வது வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு இவர்கள் வழக்கம் போல கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு கடையின் ‌ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் ஒருவர் கல்லா பெட்டியில் இருந்த பணம் மற்றும் செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்து தப்பி சென்றார்.

மேலும் அந்த மர்மநபர் அதே வணிக வளாகத்தில் உள்ள மற்றொரு செல்போன் கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே சென்று அங்கு கல்லாவில் இருந்த பணம், செல்போன் உதிரிபாகங்களை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை கடையை திறக்க சென்ற உரிமையாளர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் மற்றும் செல்போன் கொள்ளை போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் பணம் மற்றும் உதிரி பாகங்களை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மொத்தம் 2 கடைகளையும் சேர்த்து பணம் மற்றும் உதிரிபாகங்கள் ரூ.10 லட்சம் மதிப்பில் கொள்ளை போய் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காட்டூர் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News