முள்ளக்காட்டில் செல்போன் கடையில் திருட்டு
முள்ளக்காடு:
தூத்துக்குடியை அடுத்த முள்ளக்காடு காந்திநகரை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 24).இவர் முள்ளக்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை கடையை திறப்பதற்காக வந்தபோது, கடை ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு காணாமல் போயிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அடுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்கள், செல்போன் உதிரிபாகங்கள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடையில் உடைக்கப்பட்ட பூட்டை அங்கு காணவில்லை. எனவே செல்போன்களை திருடிவிட்டு, பூட்டை கொள்ளையர்கள் கையோடு எடுத்து சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.