உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் வைரஸ்

தமிழகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

Published On 2021-12-05 05:46 GMT   |   Update On 2021-12-05 05:48 GMT
கர்நாடகத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகளில் ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இது டெல்டா கொரோனா வைரசைவிட 3 மடங்கு அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் என்பதால் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஒமைக்ரான் பரவி வரும் தென்னாப்பிரிக்கா, போட்ஸ் வானா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகளை இந்தியா ‘ஹிட்-லிஸ்ட்’ நாடுகள் என்று பட்டியலிட்டு வரையறுத்துள்ளது. எனவே இந்த 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையங்களை விட்டு வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள்.

எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் 8 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 8-வது நாள் பரிசோதித்து பார்த்து ‘நெகட்டிவ்’ என்று தெரிந்தால் மட்டுமே வெளியே நடமாட வேண்டும்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்களில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை வந்த 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த சிறுமி கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த பெற்றோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


மேலும் அதே விமானத்தில் வந்த 36 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் அவரும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று லண்டனில் இருந்து வந்த 25 வயது நபருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த ஒருவர் தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த 5 பேரின் மாதிரிகளிலும் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக மரபணு பகுப்பாய்வு பரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா அறிகுறி இருந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள ‘இன்ஸ்டம்’ ஆய்வகத்துக்கும், சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அச்சப்பட தேவையில்லை.

நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டுள்ள வருக்கு எந்த வகை வைரஸ் தாக்கி இருக்கிறது என்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுக்குள் தெரியவரும். டெல்டா வகை கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள 4 பேருக்கும் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் சில நாட்களில் ‘நெகட்டிவ்’ ஆகிவிடும். அதன்பிறகு அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து 85 விமானங்களில் 12 ஆயிரத்து 188 பேர் தமிழகத்துக்கு வந்துள்ளார்கள். அவர்களை பரிசோதித்ததில்தான் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விமான பயணிகள் அனைவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறமுடியாது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் முககவசம் அணிதல், கூட்டங்களில் சேர்வதை தவிர்த்தல் போன்ற கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து கவனமுடன் இருந்தால் போதும்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

கர்நாடகா, மராட்டியம், குஜராத் மாநிலங்களில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 5 பேரில் 4 பேருக்கு டெல்டா வகை கொரோனா தான் என்று தெரியவந்திருப்பது பொது மக்களை மிகுந்த நிம்மதி அடையவைத்துள்ளது.

Tags:    

Similar News