உள்ளூர் செய்திகள்
கைது

விவசாய மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்- மின்வாரிய என்ஜினீயர் கைது

Published On 2021-12-04 04:18 GMT   |   Update On 2021-12-04 04:18 GMT
திருமங்கலத்தில் விவசாய மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் காட்டு ராஜா. விவசாயி. இவர் விவசாய பயன்பாட்டுக்காக புதிதாக மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தார்.

இந்த நிலையில் மின் இணைப்பு வழங்குவது சம்பந்தமாக அவருக்கு மின் வாரிய அலுவலகம் தகவல் அனுப்பியது.

இதை தொடர்ந்து காட்டு ராஜா, திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் முகமது உபேசை (வயது 37) சந்தித்து, மின் இணைப்பு வழங்குமாறு கூறி உள்ளார்.

அப்போது அவர், ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக்கூறி உள்ளார். பின்னர் பேசியதில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தருவதாக காட்டு ராஜா கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத காட்டுராஜா, இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் கலந்த ரூ.20 ஆயிரத்தை நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் முகமது உபேசிடம், காட்டுராஜா வழங்கினார். அப்போது அவர் பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சத்தீயசீலன், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், உதவி மின்செயற்பொறியாளர் முகமது உபேசை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான உதவி மின்செயற்பொறியாளர் முகமது உபேஸ் மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News