உள்ளூர் செய்திகள்
ஒமிக்ரான் வைரஸ்

இதை செய்தால் ‘ஒமிக்ரான்’ உயிர் இழப்பை தவிர்க்கலாம்- சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

Published On 2021-12-01 04:33 GMT   |   Update On 2021-12-01 04:33 GMT
பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். 1.25 கோடி பேர் முதல் தவணையும், 25 லட்சம் பேர் 2-வது தவணையும் போட வேண்டியுள்ளது.

இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது இந்தியாவில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உஷார் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

தடுப்பூசி போடாதவர்கள் கூடிய விரைவில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. மெகா முகாம்கள் நடத்துவதற்கு பணியாளர் தயாராக இருக்கிறார்கள். இத்தனை இருந்தும் பொதுமக்களிடம் இன்னும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் வரவில்லை.



வீடுகளுக்கு அருகில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீதி வீதியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வளவு முயற்சி எடுத்தும் கூட இன்னும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

தற்போது கொரோனா ஒமிக்ரான் வைரசாக உருமாறி பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரை காப்பாற்றி கொள்ள தடுப்பூசி ஆயுதமாக விளங்குகிறது. எனவே பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News