செய்திகள்
கனிமொழி

மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயம் நிவாரணம் வழங்கப்படும்- கனிமொழி பேட்டி

Published On 2021-11-19 08:28 GMT   |   Update On 2021-11-19 10:18 GMT
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தப்பாத்தியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ. சங்கர நாராயணன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 43 லட்சத்து 89 ஆயிரத்து 628 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் இருக்கும் மக்களுக்காக நலத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

 


வீடுகட்டி தருவது, கடன் உதவி வழங்குவது, அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் முகாம்களில் இருப்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 முகாமில் இருப்பவர்களுக்கு ரூ. 56 லட்சம் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ளது, அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் கோரிக்கைகளை முன் வைத்து பேசுவோம்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று முதல்-அமைச்சர் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... பாஜக செய்த கொடுமையை கண்டு விவசாயிகள் பயப்படவில்லை - மம்தா கருத்து

Tags:    

Similar News