செய்திகள்
பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்- அமைச்சர் சக்கரபாணி
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகுப்பில் பொங்கல் பண்டிகையின் முக்கிய பொருளான கரும்பு இடம்பெறவில்லை.
அதன்பின்னர் பொங்கல் தொகுப்பில் முழு கரும்பும் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பை இணைக்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன்களை வழங்கி, அதன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பை வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.