செய்திகள்
காயமடைந்த போலீஸ்காரர்கள்

கொடைக்கானலில் 2 போலீஸ்காரர்களை கத்தியால் குத்திய ரவுடி கைது

Published On 2021-11-17 08:40 GMT   |   Update On 2021-11-17 08:40 GMT
கொடைக்கானலில் 2 போலீஸ்காரர்களை கத்தியால் குத்தி, சோதனைச்சாவடியில் ரகளையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய காவலர்கள் உலகம்மாள், வனிதா ஆகிய 2 பேரும் லாஸ்காட் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த சையது இப்ராகிம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மகளிர் போலீசார் மீது இடிப்பது போல வேகமாக வந்துள்ளனர்.

இதனை போலீசார் தட்டிக் கேட்டதால் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் உலகம்மாள் புகார் அளித்தார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, போலீஸ் ஏட்டுகள் சின்னச்சாமி, உதயகுமார், சீனிவாசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சையது இப்ராகிம் தனது வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அங்கு சின்னச்சாமி மற்றும் சீனிவாசனை பட்டா கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விரைந்து வந்து காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சையது இப்ராகிமை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தனது மனைவியுடன் காரில் சையது இப்ராகிம் கோவைக்கு தப்பிச் செல்வதற்காக சென்று கொண்ருந்தார். அவரை அடையாளம் கண்ட போலீசார் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்களிடமும் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருந்தபோதும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசார் சையது இப்ராகிமை பிடித்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொடைக்கானல் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News