செய்திகள்
திருத்துறைப்பூண்டி பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை முத்தரசன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் - முத்தரசன்

Published On 2021-11-15 12:05 GMT   |   Update On 2021-11-15 12:05 GMT
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுகள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி பிச்சன்கோட்டகம், தென்பாதி, மேலமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது பெய்த கனமழையினால் சம்பா தாளடி பயிர்கள் முழுவதும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

மீன்பிடி தடை காலங்களில் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகை போல், விவசாய தொழிலாளர்கள் மழை காலங்களில் வேலைக்கு செல்லாத நிலை உள்ளது. அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் முழுவதும் பழுதடைந்துள்ளன. பழுதடைந்த வீட்டிற்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும். வளவனாறு கரைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு தலையிட்டு அந்த வளவனாற்று கரையை பலப்படுத்தி சாலை அமைத்து தர வேண்டும்.

இ்வ்வாறு அவ் கூறினார்.

பேட்டியின் போது விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பெரியசாமி, மாரிமுத்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News