மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக பெய்த அதி கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்குள் தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதால் 4 லட்சம் ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
ஏற்கனவே உயர்த்தி அறிவிக்கப்பட்டதை குறைத்து அறிவிப்பது இயற்கை நியதிக்கு முரணானது. அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, முதல்அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தர விட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...580 ஆண்டுகளுக்கு பிறகு மிக நீண்ட நேர பகுதி அளவு சந்திரகிரகணம் - இந்த மாநிலங்களில் மட்டுமே காணமுடியுமாம்