செய்திகள்
நகை பறிப்பு

விளாங்குடியில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-11-02 10:36 GMT   |   Update On 2021-11-02 10:36 GMT
விளாங்குடியில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

புது விளாங்குடி ராம மூர்த்தி நகர், சர்ச் தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 35). இவரது கணவர் சதீஷ் குமார், சமையல் எண்ணை வியாபாரி.

உஷா குடும்பத்துடன் இரவில் வீட்டில் படுத்து தூங்கினார். அவர் முன் கதவை சரியாக தாழிடவில்லை என்று தெரிகிறது. நள்ளிரவில் மர்ம நபர் கதவைத்திறந்து வீட்டுக்குள் புகுந்தான். உஷா படுக்கை அறையில் அசந்து தூங்கி கொண்டு இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையன், அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை நைசாக கழற்ற முயன்றான்.

அப்போது உஷா திடுக்கிட்டுக் கண் விழித்தார். வீட்டுக்குள் திருடன் நிற்பதை பார்த்து ‘திருடன், திருடன்’ என்று சத்தம் போட்டார்.

இருப்பினும் கொள்ளையன் உஷா கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டான்.

இது குறித்து உஷா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News