செய்திகள்
நாமக்கல்லில் மூதாட்டியிடம் 8½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
நாமக்கல்லில் மூதாட்டியிடம் 8½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி சந்தைப்பேட்டைபுதுார் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 64). ரியல் எஸ்டே்ட தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சரோஜா (60).
இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த, 3 மர்மநபர்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தாலிசங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சரோஜா கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து, மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை விரட்டினர். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.