செய்திகள்
கொடைக்கானல் பஸ் நிலைய பகுதியில் மழைக்கு குடைபிடித்தபடி செல்லும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

Published On 2021-10-31 10:36 GMT   |   Update On 2021-10-31 10:36 GMT
முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கொடைக்கானல்:

தொடர் மழை மற்றும் பண்டிகை காலம் என்பதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொதுமக்கள் அவர்கள் ஊர்களிலேயே தங்கியுள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்ப்பவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இதனால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. கேரளாவில் இருந்து மட்டும் குறைந்த அளவு பயணிகள் வந்திருந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

நட்சத்திர ஏரியிலும் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே படகுசவாரி செய்தனர். இருந்தபோதும் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. அடுத்தமாதம் முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News