வடவள்ளி அருகே ஊழியரை தாக்கி 2 கிலோ தங்கம் கொள்ளை - ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர் துணிகரம்
வடவள்ளி:
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது50). இவர் ஒரு கடையில் இருந்து தங்கம் வாங்கி மற்றொரு கடைக்கு கொடுக்கும் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு தங்கத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என போன் வந்துள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் இருந்து காந்திபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பின்னர் அந்த குறிப்பிட்ட கடைக்கு சென்று நகைகள் செய்வதற்கு தேவையான 2 கிலோ தங்கத்தை வாங்கி கொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு புறப்பட்டார்.
காந்திபுரத்தில் இருந்து வடவள்ளியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர் சென்று கொண்டிருந்த போது, 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
தொண்டாமுத்தூர் அருகே வந்தபோது பின்னால் வந்த 2 பேரும் திடீரென சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை முந்தி வந்து, அவரை மறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி வேகமாக சண்முகத்தை நோக்கி வந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, உன்னிடம் தங்கம் இருப்பது எங்களுக்கு தெரியும். அதை எங்களிடம் கொடுத்து விட்டு இங்கிருந்து செல் என்றனர். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என மிரட்டி, அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் மற்றும் செல்போனை பறித்தனர். பின்னர் அவரை கீழே தள்ளி விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சண்முகம் எழுந்து ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து சண்முகம் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சண்முகம் தங்கம் வாங்கி விற்பதை அறிந்தே கொள்ளையர்கள் தங்கள் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். மேலும் இவர்கள் பல நாட்கள் அவரை பின் தொடர்ந்து வந்து கண்காணித்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த நபர்கள் யார்? இதில் 2 பேர் மட்டும் தான் ஈடுபட்டனரா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.