செய்திகள்
பொதுமக்கள் வசதிக்காக திருப்பூரில் நடை மேம்பால பணிகள் தீவிரம் பறக்கும் பாலத்துக்காக வாகனங்கள் கணக்கெடுப்பு
இருக்கும் சில இடங்களிலும் பிளாட்பார வியாபாரிகள் கடை வைப்பதும், கடைக்காரர்கள் தங்கள் கடை பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகளும் வைத்து மறித்து விடுகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நகர பகுதியில் டவுன் பஸ்கள், வெளியூர் பஸ்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வாகனங்கள், ஆட்டோ, வேன், லாரி போன்ற சரக்கு வாகனங்கள், ஆட்டோ டாக்சி, தனியார் சொந்த வாகனங்கள் என தினமும் லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலும் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு நடந்து செல்ல வேண்டியது உள்ளது. ஆனால் பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகளுக்கான நடைபாதை மிகவும் குறைவு.
இருக்கும் சில இடங்களிலும் பிளாட்பார வியாபாரிகள் கடை வைப்பதும், கடைக்காரர்கள் தங்கள் கடை பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகளும் வைத்து மறித்து விடுகின்றனர். இதனால் பிரதான ரோடுகளை கடந்து செல்வதில் பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் டவுன்ஹால் அருகே நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. குமரன் ரோடு, நேரு வீதி சந்திப்பை இணைக்கும் வகையில் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் மற்றும் டவுன்ஹால் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ஏறி இறங்கும் வகையில் இந்த நடை மேம்பாலம் இருக்கும்.
இந்தப்பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது பாதசாரிகள் எளிதாக சாலையை கடந்து செல்வர். மேலும் நகரின் பிரதான சாலைகளில் பறக்கும் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் முதல் சின்னக்கரை வரை பறக்கும் பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான மண் பரிசோதனை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு செய்யும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு 7 நாட்கள் தொடர்ந்து (24 மணி நேரமும்) மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த கட்டமாக இன்னும் 8 இடங்களில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.