செய்திகள்
பங்குச்சந்தை வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி - வாலிபர் கைது
பங்குச்சந்தை வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.6½ லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே சண்டிசாட்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவர் டெலிகிராம் செயலி மூலம் மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவை சேர்ந்த கார்த்திக்செல்வன் (31) என்பவரை சந்தித்தார். அப்போது கார்த்திக்செல்வன், தான் பங்குச்சந்தை வர்த்தகம் செய்வதாகவும், அதற்காக பயிற்சி அளிப்பதாகவும் கூறியதோடு தன்னிடம் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதத்திற்குள் ரூ.15 லட்சம் தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய சுரேஷ், கார்த்திக்செல்வத்தின் வங்கி கணக்குக்கு 10 தவணையாக மொத்தம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற கார்த்திக்செல்வன், 3 மாதத்திற்குள் கூடுதல் தொகையை சுரேசுக்கு கொடுக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்செல்வனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதுரை திருமங்கலம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற கார்த்திக்செல்வனை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.