செய்திகள்
வெங்காயத்தை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருப்பூரில் இன்று வெங்காயத்தை நடுரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2021-09-25 11:53 GMT   |   Update On 2021-09-25 11:53 GMT
வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் :
 
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வெங்காயம் சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது வெங்காயம் கிலோ ரூ.8க்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வெங்காய சாகுபடிக்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கரில் சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும். தற்போதைய விலையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே வெங்காயத்திற்கு ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும் வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருப்பூர் மாவட்ட  கலெக்டர் அலுவலகம் முன்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாவட்ட  கலெக்டர் அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்தனர்.
Tags:    

Similar News