செய்திகள்
பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
பொம்மிடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் கடத்தூரை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை 9 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். ரேகடஅள்ளி அருகே சென்ற போது பொம்மிடியில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.