செய்திகள்
தீக்குளிக்க முயன்ற கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி லட்சுமி.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2021-09-20 12:00 GMT   |   Update On 2021-09-20 12:20 GMT
மேலும் தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா தோணக்காட்டுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 69). இவரது மனைவி லட்சுமி(62). இவர்கள்  2 பேரும் இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை  உடலில் ஊற்றி தீவைக்க முயன்றனர். இதனைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 2 பேரும் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களது சொத்துக்களை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். கோவிந்தசாமி தேங்காய் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.

தொழிலை விரிவுப்படுத்துவதற்காக வங்கியில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதனை அடைக்க முடியவில்லை. இதையடுத்து அவரது நண்பர் முகமது என்பவர் வேறொரு வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அதற்காக கோவிந்தசாமியின் தோட்டத்தை தனது பெயருக்கு மாற்றி தருமாறு முகமது கேட்டுள்ளார்.

நண்பர் என்பதால் கோவிந்தசாமி முகமது பெயருக்கு தோட்டத்தை பத்திரம்  எழுதி கொடுத்துள்ளார். இந்தநிலையில் முகமது அந்த தோட்டத்தை வேறொரு நபருக்கு கிரையம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

எனவே முகமது மீது நடவடிக்கை எடுத்து தோட்டத்தை மீட்டுதர கோரி   கணவன்-மனைவி இருவரும் தீக்குளிக்க முயன்றுள்ளனர். போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 2 பேரும் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு சென்றனர்.
Tags:    

Similar News