செய்திகள்
அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்கள்

அதிவேகமாக வாகனங்களை ஓட்டியவர்களுக்கு ரூ.2.80 லட்சம் அபராதம்

Published On 2021-09-14 02:10 GMT   |   Update On 2021-09-14 02:10 GMT
அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய குற்றத்துக்காக அதன் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை :

சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை போக்குவரத்து கமிஷனர் வழிகாட்டுதலின் பேரிலும், எனது (ரவிச்சந்திரன்) உத்தரவின்படியும் சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடந்த 9-ந் தேதி இச்சரக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாதவன், வெங்கடேசன், ஸ்ரீதரன், ஜெயகுமார், செந்தூர்வேல், இளமுருகன், மோகன், கிரிராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களான குணசேகரன், சீனிவாஸ், திருநாவுக்கரசு, நித்யா, ஞானவேல், செல்வி, சரவணன், ரமேஷ், கருப்பையா, காவேரி, பன்னீர்செல்வம், லீலாவதி, சுரேஷ்குமார், ராஜராஜேஸ்வரி ஆகியோர் தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து 71 கார்கள் மற்றும் இதர வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. மேலும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய குற்றத்துக்காக அதன் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News