search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதி மீறல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

    அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிக்னல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியது.

    அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில் சாலைகளில் செல்ல வேண்டிய வேககட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட (45கி.மீ.) அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை, திண்டிவனம் சாலையில் ஜிப்மர் முதல் இந்திராகாந்தி சிலைவரை, கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நவீன கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையும் இணைந்து அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.

    எனவே இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்டமாக மேலும் பல முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    • சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
    • சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    சென்னை:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

    போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் சென்று விடும்.

    இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. அனைத்து போக்குவரத்து சந்திப்புகளிலும் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறக்கூடாது. சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தேவையில்லாமல் அபராதத்தை செலுத்தாதீர்கள். ரூ.500 இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சராசரி செலவை சமாளிக்கலாம். தேவையில்லாமல் உங்களுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு ஆசையில்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
    • 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள்.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீசார் போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்துக்காகவும் ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதற்காக போலீசார் நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள். இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
    • புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் நேற்று நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'வாட்ஸ் அப்', 'பேஸ்புக்' , 'டுவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போக்குவரத்து போலீசுக்கு தற்போது பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக 'வாட்ஸ் அப்'பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். போக்குவரத்து இடையூறுகள், விதிமீறல்கள், போக்குவரத்து போலீசார் செய்யும் தவறுகள் குறித்து புகார்கள் வருகிறது.

    இதுபோல் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசின் 'டுவிட்டர்' பக்கத்தை 69 ஆயிரத்து 162 பேர் பின்தொடர்கிறார்கள். அதன் வாயிலாக கடந்த 2 மாதங்களில் 10,400 தகவல்கள் பெறப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வந்த 1267 புகார்களில் 90.5 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    இதுபோல 'வாட்ஸ் அப்' வாயிலாக இந்த ஆண்டு 669 புகார்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. 'பேஸ்புக்'கை 1 லட்சத்து, ஆயிரத்து 734 பேர் பின் தொடர்கிறார்கள். 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தை 5,256 பேர்கள் பின்தொடர்கின்றனர்.

    சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் தவறான புகார்கள் கூட அனுப்பி விடுகிறார்கள். அதிக அபராத தொகை விதிப்பதால் கோபங்கொண்டு சமீபத்தில் 3 பேர் போக்குவரத்து போலீஸ் மீது புகார் அனுப்பி விட்டனர். பின்னர் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு வீடியோ தகவல் அனுப்பி இருந்தனர். இதுபோல் புகார் அனுப்புகிறவர்கள், சம்பவம் நடந்த இடம், தேதி, நேரம் ஆகியவை பற்றியும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விசாரணை நடத்த எளிதாக இருக்கும்.

    போலீசுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் பற்றியும் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் போலீசுக்கு எதிராக தவறான, அவதூறு பரப்பும் புகார்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது போன்ற தகவல்கள் அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் நியாயமான, உண்மையான புகார்களை தெரிவிப்பதை வரவேற்கிறோம். ஆலோசனை கூட தெரிவிக்கலாம்.

    அரசு பஸ்கள் மற்றும் இதர அரசு வாகனங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் தவறு செய்தால், அந்த தவறை பொதுமக்களும் செய்கிறார்கள். அரசு வாகன டிரைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

    அண்ணாநகர் மாநகர பஸ் பணிமனையில் பணியாற்றுபவர்கள் மீது அதிக அளவில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது. அது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியில் புகார் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இதை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் தினவிழா கொண்டாடுவதை கண்காணித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போதையில் வாகனம் ஓட்டி போலீசில் மாட்டுபவர்கள் உரிய அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பிட்ட வாகனங்கள் அல்லது அவர்களின் இதர வாகனங்கள் போன்ற அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு உடன் இருந்தார்.

    • அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.
    • அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

    இப்படி விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள் சிக்னலை மீறி சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இது போன்று அபராதம் விதிக்கும்போது வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணமாக அபராத தொகையை வாங்குவதில்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். பே.டி.எம் கியூ. ஆர்.கோடு மூலமாகவும் ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் அபராத தொகையை வசூலித்து வருகிறார்கள். விதி மீறலில் ஈடுபடும் நபர்களிடம் பணம் இல்லையென்றால் போலீசார் அபராத ரசீதை கையில் கொடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்திவிடுமாறு கூறி விடுவார்கள்.

    இந்த அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தாமல் பலரும் காலம் தாழ்த்திக்கொண்டே வருவது வழக்கம். பலர் அபராதம் விதிக்கப்பட்டதையே மறந்து போய் இருப்பார்கள். இது போன்ற நபர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விதி மீறலில் ஈடுபடுபவர்களின் அபராத ரசீதை வாங்கி வைத்துக்கொண்டு அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களை சாலையில் மடக்கி பிடித்து அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அபராத வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை நேற்று முதல் தொடங்கி உள்ளது. இனி சாலைகளில் நின்று விதிமீறல் வாகனங்களை பிடிக்கும் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் நம்பரை வைத்து குறிப்பிட்ட வாகனம் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருந்தால் உடனடியாக அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து முகாம் அமைத்து அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    இதன்படி அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பாக பணி புரிந்து அதிக அபராத தொகையை வசூலிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இவர்களை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். இப்படி போக்குவரத்து போலீசார் அபராத வசூல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    உங்கள் வாகனம் எங்கேயாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான அபராத தொகையை கட்டி விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் வெளியில் செல்லும்போது போக்குவரத்து போலீசாரிடம் நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். அப்போது இத்தனை நாட்களாக ஏன் அபராத தொகையை கட்டவில்லை என்று போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே உஷாராக இருங்கள்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பேரியில் அவர் ஆய்வு செய்த போது உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோவை நகரில் பல இடங்களில் கேமராக்கள் இல்லை.
    • போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    கோவை :

    கோவை நகரில் அவினாசி ரோடு மேம்பால பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் கேமராக்கள் இல்லை. ஆனால் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களை நோட்டமிட்டு அவர்கள் செல்போன்களில் வாகனங்களின் பதிவு எண்ணை பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தெரியாமலே பின்பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார் செல்போனில் எடுக்கிறார்கள்.

    இந்த நிலையில் கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே நேற்று தனியார் நிறுவனர் ஊழியர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். பின் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் இரவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். டி.என்.99 யு 5829 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றவரும், பின்னால் உட்கார்ந்தவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

    அவரது இருசக்கர வாகனத்தின் அருகில் சென்றவர்கள்தான் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். ஒரே போட்டோவில் 2 இருசக்கர வாகனங்கள் பதிவாகி உள்ளது. தவறு செய்தவருக்கு விதிக்க வேண்டிய அபராதத்தை, போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணனிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தார்.

    இதுபோன்ற குளறுபடிகள் நகரின் பல இடங்களிலும் நடைபெறுகிறது. மறைந்து நின்றுகொண்டு அபராதம் விதிப்பது போன்ற போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படுகிறது. அங்கு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. திடீர், திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

    இதனால் தனியார் பஸ் டிரைவர்கள் வாகனங்களை நீண்டநேரமாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஒழுங்குபடுத்தி சரியானமுறையில் செயல்படவைப்பதுடன், தவறு செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

    • பொது மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்.
    • காரில் செல்கையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும்.

    பல்லடம் :

    பல்லடத்தில், போக்குவரத்து விதிகளை மீறிய 706 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்.குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது. காரில் செல்கையில் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும்,போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.

    இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீ்ஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் .

    இதில் கடந்த ஜூன் மாதத்தில் இருசக்கரவாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 155 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 12 பேர் , சிக்னலை மதிக்காமல் செல்வது,நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 706 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.2,13,600 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 136 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது .இவ்வாறு பல்லடம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ×