செய்திகள்
விபத்து

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

Published On 2021-09-09 05:11 GMT   |   Update On 2021-09-09 05:11 GMT
ஆரல்வாய்மொழி அருகே சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே படசேரி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா (வயது 45). இவரது அண்ணன் மகன் திருமணம் இன்று குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்தது.

திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சந்திரிகா, அவரது உறவினர்கள் ஜெயலட்சுமி (50), கமலம் (48), தமிழரசி ஆகியோர் ஆரல்வாய்மொழிக்கு வந்திருந்தனர். நேற்றிரவு நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து விட்டு 4 பேரும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக திருச்செந்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சரத்குமார், அவரது மனைவி இசைகலா மற்றும் 2 குழந்தைகள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ரோட்டில் சென்ற 4 பேர் மீதும் மோதியது.

இதில் நடந்து சென்ற 4 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் காயமடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதில் ஜெயலெட்சுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜெயலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கமலம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண வீட்டிற்கு வந்த இடத்தில் பெண் விபத்தில் சிக்கி பலியானதால் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News