செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில், இதுவரை 5 ஆசிரியர்களுக்கு கொரோனா - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ஆசிரியர்கள் வகுப்பு எடுத்த மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் நெசவாளர்காலனி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 2 ஆசிரியர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த ஆசிரியர்கள் வகுப்பு எடுத்த மாணவர்கள் 58 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே பள்ளியில் 3 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் நெசவாளர்காலனி அரசு பள்ளி 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் ஊத்துக்குளி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தாராபுரம் கொளத்துப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த பகுதி நேர ஆசிரியருக்கு நேற்று தொற்று உறுதியானது.
இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. மதியம் உணவு இடைவேளையின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை தடுக்க ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
காய்ச்சல் அறிகுறி இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு பள்ளிக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.