செய்திகள்
அணைமேடு பகுதியில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம்-அதிகாரிகள் பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் போராட்டத்தை கைவிடாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37-வது வார்டு அணைமேடு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அணைமேடு பகுதியில் வருவாய்துறையினர் இடம் அளவீடு செய்ய வருவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து இடம் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுட்டிருந்த அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருந்தும் போராட்டத்தை கைவிடாமல் அப்பகுதி மக்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.