செய்திகள்
நாமகிரிப்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
நாமகிரிப்பேட்டை அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 80). இவருடைய மனைவி பாப்பா (71). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன், மனைவி கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று குப்பன் வெளியில் சென்று விட்டார். அப்போது வீட்டில் உள்ள அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூதாட்டி பாப்பா அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.