செய்திகள்
சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
தோண்டப்படும் குழிகளால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரிவர குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டிலும் புதிய சாலை போடுவதற்காக பல்வேறு இடங்களில் குழி தோண்டப்பட்டு உள்ளது.
அவ்வாறு தோண்டப்படும் குழிகளால் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சரிவர குடிநீர் வழங்கவில்லை எனவும் சாலைப் பணிகள் மெதுவாக நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதால் சாலை போடும் பணியை வேகமாக முடிக்க வேண்டும் என அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதி மக்கள் சாலைகளை உடனடியாக சீர் செய்யக் கோரி கொங்கு மெயின் ரோட்டில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு விரைந்து சென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி சாலை போடும் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.