ராமநாதபுரத்தில் காய்கறி வாங்க வந்த மூதாட்டியிடம் 12 பவுன் நகை நூதன திருட்டு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 60). இவரது கணவர் அந்தமானில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை காய்கறி வாங்குவதற்காக ராமநாதபுரம் தலைமை போஸ்ட் ஆபீஸ் அருகில் வரும்போது 40 வயது மதிக்கதக்க 2 நபர்கள் வந்து போலீஸ் உங்களை கூப்பிடுறாங்க என்றனர்.
அங்கம்மாள் எதற்கு என்று கேட்டதற்கு மாஸ்க் போடாததற்கு உங்களை கூப்பிடுறாங்க என்று கூறி தலைமை போஸ்ட் ஆபீஸ் வடக்கு பக்கம் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் அழைத்து சென்றனர்.
அங்கு உங்க சங்கிலியை கழட்டுங்க என்று கூறி கழுத்தில் கிடந்த தாலி செயினுடன் கூடிய 9 பவுன் நகைகளை கழற்றி கொடுத்துள்ளார். அதன் பின்பு கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல்களையும் கழற்றினர்.
அங்கம்மாள் கையில் வைத்திருந்த கட்டை பையில் வைப்பது போல் வைத்து விட்டு, அதில் இருந்த 12 பவுன் நகைகளை நைசாக திருடி சென்று விட்டனர்.
சிறிது தூரம் சென்று பையை பார்த்தபோது நகை இல்லாதது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த மூதாட்டி 2 நபர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை திருடிச்சென்ற 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.