செய்திகள்
கைது

தந்தைக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல்- அத்துமீறியவர் கைது

Published On 2021-07-23 10:48 GMT   |   Update On 2021-07-23 10:48 GMT
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தந்தைக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 50). புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெறுவதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 18-ந் தேதி புற்றுநோய் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அருகில் இருந்து உதவி செய்வதற்காக 23 வயது மகளையும் அழைத்து வந்திருந்தார். அவர் தந்தை ஸ்டாலினுக்கு சாப்பாடு வாங்க செல்வது, மருந்து, மாத்திரை வாங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து அருகிலிருந்து கவனித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் அந்த பெண் தூக்கம் வராமல் விழித்திருந்தார். இதனை அதே வார்டின் பக்கத்து படுக்கையில் அனுமதிக்கப்பட்டு இருந்த திருச்சி பாலக்கரை கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ராமகிருஷ்ணன் (41) நீண்ட நேரமாக நோட்டமிட்டு கொண்டு இருந்துள்ளார்.

அவர், அந்த பெண்ணிடம் தான் கீழே சென்று டீ குடிக்க போகிறேன், நீங்கள் எனக்கு துணையாக வாருங்கள் என்று கூறியுள்ளார். நோயாளி என்ற முறையில் அவருக்கு உதவுவதற்காக உடன் சென்றுள்ளார்.

டீ குடித்துவிட்டு மீண்டும் திரும்பி வருகிறபோது, ராமகிருஷ்ணன் அந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த இளம்பெண் உடனடியாக அவரை தள்ளி விட்டுவிட்டு திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் அளித்தார்.

இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ராமகிருஷ்ணனை மருத்துவமனை வளாகத்தில் தேடினார்கள். அவர் மருத்துவமனையின் மற்றொரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் இரவே அவரை கைது செய்தனர். பின்னர் இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இளம்பெண்கள் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி விடக்கூடாது. தெரியாத நபர்கள் கூப்பிட்டால் யாருடனும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் கூறினர்.
Tags:    

Similar News