ராமநாதபுரம் அருகே தலையில் கல்லை போட்டு வியாபாரி கொலை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 60). இவர் கருவேல மரங்களை குத்தகைக்கு எடுத்து விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் (43) என்பவரும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்ணனுக்கு சொந்தமான கருவேல மரங்களை அர்ச்சுனன் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பொட்டகவயல் முத்துமாரியம்மன் கோவிலில் கர்ணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அர்ச்சுனன், கர்ணன் தலையின் மீது கல்லை தூக்கி போட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் அலறினார்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து அர்ச்சுனனை மடக்கி பிடித்தனர். மேலும் அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
உயிருக்கு போராடிக்கொண்டிந்த கர்ணனை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பொதுமக்கள் அடித்ததில் காயம் அடைந்த அர்ச்சுனன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தேவிபட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.