சேலம் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை- போலீசார் விசாரணை
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மேட்டூர் ரோடு அங்கமுத்து நகரில் குடியிருப்பவர் கிருஷ்ணன் (வயது 65) விவசாயி. இவரது மனைவி உமா ரமணி. இவருக்கு கண் ஆபரேஷன் செய்வதற்காக கிருஷ்ணன், மகன் முத்து ஆகிய 3 பேரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வீட்டின்மேல் மாடியில் வாடகைக்குகுடியிருப்பவர் போன் மூலம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது என்று கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். மேலும் மேச்சேரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க ஆரம் மற்றும் தோடு உள்பட 9¾ பவுன் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.