செய்திகள்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். இவர்களில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் ஒருவர். எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக பொறுப்பு ஏற்றதையடுத்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பாஜக கடைப்பிடிக்கிறது. கட்சி விதிகளின்படி ஒருவர் கட்சிப் பதவியில் இருந்தால், அவர் அரசுப் பதவியில் இருக்க முடியாது. எனவே, எல்.முருகன் மத்திய மந்திரி ஆனதும், பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின்னர் அவர், தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து விட்டு, பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மத்திய மந்திரியாக எல்.முருகன் பொறுப்பேற்றார்- ஜே.பி.நட்டா மற்றும் தலைவர்களுடன் சந்திப்பு