செய்திகள்
கொரோனா வைரஸ்

சங்கரன்கோவில் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ. 5½ லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2021-07-04 05:17 GMT   |   Update On 2021-07-04 05:17 GMT
சங்கரன்கோவில் அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் ரூ. 5½ லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தட்டான்குளத்தை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 59). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார்.

தினமும் இவர் வீட்டை பூட்டிவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்று வழக்கம்போல காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 2½ லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 5½ ஆகும்.

இது குறித்து அவர் சின்னக்கோவிலான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொள்ளைபோன இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்தனர்.

சின்னக்கோவிலான் குளம் அருகே உள்ள ஆழ் கொண்டார்குளத்தை சேர்ந்தவர் விவசாயி முருகையா (59). இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த ரூ. 30 ஆயிரத்தை எடுத்து சென்றனர்.

இது தொடர்பாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News