செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? தமிழக அரசு தெளிவுபடுத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Published On 2021-06-27 02:49 GMT   |   Update On 2021-06-27 02:49 GMT
தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும் போது, தாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில், தி.மு.க. தனது தேர்தல் பிரசாரத்தில் அனைத்து இடங்களிலும் பேசும் போது, தாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை நிறைவேற்ற 
நீட் தேர்வு
 வேண்டாம் என்பதுதான் அனைவரது நிலைபாடு.

நீட் விலக்குக்காக அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது, விலக்கும் பெற்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீட் தேர்வை அ.தி.மு.க. கடுமையாக எதிர்த்த போதும், நீட் இருக்கும் வரை, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை அத்தேர்வுக்கு தயார்படுத்தும் பணியையும், அதற்கு ஏற்றார் போன்ற பாடத் திட்டங்களை மாற்றி அமைத்ததோடு, மாவட்டந்தோறும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

மேலும், நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக வல்லுனர்களைக் கொண்டு ஒரு சிறப்பு கையேடும் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வித நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசால் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டது. இதனால், சுமார் 435 மாணவ, மாணவியர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்களது 5 ஆண்டுக்கான மருத்துவக் கல்விச் செலவினை அ.தி.மு.க. அரசே ஏற்றுக்கொண்டது.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் நான் பேசும்பொழுது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தீர்களே, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட்டின் பின் விளைவுகளை அறிவதற்கு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் பதில் அளித்தார். அதைத்தொடர்ந்து, நான் பேரவையில் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் இருப்பின் மாணவர்கள் இதற்கு தயார் ஆக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, முதல்-அமைச்சர் இதற்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை.



தற்போதைய அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் மத்தியிலும் எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று வாக்குறுதி தந்த இந்த அரசு நியமித்துள்ள ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News